நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையில் நடந்த பயங்கர மோதலில் ஒருவர் பலியானதை அடுத்து தூத்துக்குடியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கடலில் மீன் பிடிப்பது தொடர்பாகத் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கும் திருச்செந்தூர் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் மத்தியில் நடத்தப்பட்ட பேச்சில், விசைப்படகு மீனவர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றும், அதுவும் 3 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் சென்று தான் மீன்பிடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தாக்குதலில் மீனவர் பலி!
இந்நிலையில் தூத்துக்குடி புதுத்தெரு கென்னடிக்குச் சொந்தமான படகில் குரூஸ்புரம் அந்தோணி சாமி, சேகர், புதுத்தெரு ஜார்ஜ், பூபாலராயர் புரம் ஃபிலிப், ஸ்டீபன் உள்ளிட்ட 7 பேர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் பகல் 11 மணியளவில் மணப்பாடு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 10 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் வந்த மீனவர்கள் விசைப் படகைச் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அந்தோணி சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதனால் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் மீனவர் அந்தோணி சாமியின் உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்ட போது பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து தூத்துக்குடி கோட்டாட்சியர் கலைமணி, வட்டாட்சியர் வேலுசாமி, மீன்வளத்துறை இணை இயக்குனர் சுப்புராஜ், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கோரி ஆகியோர் அங்கு வந்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்
25 பேர் மீது வழக்கு!
தாக்குதல் தொடர்பாக மணப்பாடு ஊர்க் கமிட்டி துணைத் தலைவர் டொமினிக் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மணப்பாடு மீனவர் காலனி பிவிண்டன், குமார் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தாக்குதலில் பலியான மீனவர் அந்தோணிசாமியின் உடல் நேற்று இரவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.