Publish Date: Thu, 31 Jan 2008 (09:53 IST)
Updated Date: Thu, 31 Jan 2008 (09:53 IST)
''சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு உறுதியுடன் செயல்படுத்தவேண்டும்'' என்று கம்யூனிஸ்டு கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் மாநில குழுக்கள் சார்பாக கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் மக்களின் 150 ஆண்டுகால கனவான சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊசலாட்டத்தை களைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.
இந்த திட்டத்திற்கான முழு ஒப்புதலை கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசே வழங்கியிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோர மீன்பிடி தொழிலுக்கு பாதகம் இல்லாத வகையில் சேது சமுத்திர கால்வாயின் பாதைக்கு நாகபுரியில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக ஒப்புதல் கடந்த 2005-ம் ஆண்டிலேயே பெறப்பட்டது.
இப்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற பா.ஜ.க., வி.எச்.பி. உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் குறுக்கு சால் ஓட்ட முனைந்துள்ளது அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டது. இதற்கு அ.இ.அ.தி.மு.க.வும் துணைநிற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணையில் மத்திய அரசு தொல்லியல் துறை தாக்கல் செய்து மனுக்களை திரும்ப பெற்றது. மாற்றுப்பாதை மூலம் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க கால அவகாசம் கோரியது.
அதுவரை கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டை சேதப்படுத்தாமல் அகழ்வுப்பணியை தொடருவது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியற்ற நிலைபாட்டை மேற்கொண்டு வருவது கவலையளிக்கும் போக்காகும். தற்போது மீண்டும் 4 வார காலம் அவகாசத்தை அரசு கோரியுள்ளது.
மத்திய அமைச்சர் அம்பிகாசோனி இந்த மணல் திட்டு இயற்கையாக அமைந்ததா இல்லை மனித முயற்சியால் கட்டிய பாலமா என்ற விஞ்ஞான ரீதியான உண்மையை விட இது மக்களின் நம்பிக்கை சார்ந்த பிரச்சினை என்று கருத்து தெரிவித்துள்ளது வகுப்பு வாத சக்திகளின் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு துணைபோகும் விதத்தில் உள்ளது. எனவே ஊசலாட்டத்தை கைவிட்டு மத்திய அரசு உறுதியுடன் செயல்படுத்தவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Webdunia
Publish Date: Thu, 31 Jan 2008 (09:53 IST)
Updated Date: Thu, 31 Jan 2008 (09:53 IST)