Publish Date: Mon, 21 Jan 2008 (15:42 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (15:42 IST)
விமானங்களை தீவிரவாதிகள் கடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளிடமும் தீவிர சோதனையிடப்படுகிறது.
நாசவேலைகள் ஏதும் நடக்காமல் இருக்க மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திலும், அதனைச் சுற்றியும் 24 மணிநேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.