Publish Date: Sat, 19 Jan 2008 (17:09 IST)
Updated Date: Sat, 19 Jan 2008 (17:08 IST)
தமிழகத்தில் ஹிந்தி எதிப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோர் நினைவாக வருகிற 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும்.
அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வருகின்ற 25.1.2008 வெள்ளிக்கிழமை அன்று அ.இ.அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பாக வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் , கழக அமைப்புரீதியான மாவட்டத் தலைநகரங்களில் நடக்க உள்ளது.
பொதுக் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்'' என்று கூறியுள்ளார்.