Publish Date: Thu, 10 Jan 2008 (13:53 IST)
Updated Date: Thu, 10 Jan 2008 (11:02 IST)
''பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது'' என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம். 18 மற்றும் 21ஆம் தேதிகளிலும் 5வது காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல் நடமாடும் திரையரங்குகளும் 15, 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை காட்சியாகவும், 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகல் காட்சியாகவும் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.