Publish Date: Thu, 03 Jan 2008 (16:43 IST)
Updated Date: Thu, 03 Jan 2008 (16:42 IST)
விபத்தே இல்லாமல் பேருந்தை ஓட்டும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவர்கள் குடும்பமே வாழும் அளவுக்கு, வாழ்த்தும் அளவுக்கு வழங்கப்படும் அந்த பரிசு என்ன என்பதை பட்ஜெட்டில் அறிவிப்பேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழகம் முழுவதிலும் இயங்கும் வகையில் 1,094 புதிய பேருந்துகளின் துவக்க விழா சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைத்து பேசுகையில், முதன் முதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை சென்னை நகரில் இருந்து இயக்கி ஒவ்வொரு பகுதிக்கும் பிரித்து கொடுக்கின்ற விழா என்று சொல்ல வேண்டும். இந்த புதிய பேருந்துகள் அழகுடனும், அழகான இருக்கைகளுடனும், நல்ல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளன. நான் காரில் வரும்போது இறங்கி ஒரு பேருந்தில் உட்கார்ந்து சவாரி செய்யலாமா? என்று ஆசை வந்தது. அதை அமைச்சர் நேரு விரைவில் நிறைவேற்றி வைப்பார் என நம்புகிறேன்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பேருந்துகளும் தேசிய மயமாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இன்றளவும் போக்குவரத்துத்துறை எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் அனைவருடைய ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. இன்றைய தினம் 1094 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இலவச டி.வி. கொடுக்கிறார்கள் அதில் என்ன பயன்? வேலை என்ன ஆச்சு? என்று சிலர் கேட்கிறார்கள்.
விபத்தே இல்லாமல் பேருந்தை ஓட்டும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவர்கள் குடும்பமே வாழும் அளவுக்கு, வாழ்த்தும் அளவுக்கு வழங்கப்படும் அந்த பரிசு என்ன என்பதை பட்ஜெட்டில் அறிவிப்பேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
விழாவில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் திரிபாதி, மேயர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.