Publish Date: Wed, 02 Jan 2008 (14:13 IST)
Updated Date: Wed, 02 Jan 2008 (14:13 IST)
தமிழகம் முழுவதும் 1,000 புதிய பேருந்துகளை முதலமைச்சர் கருணாநிதி நாளை துவக்கி வைக்கிறார். சென்னைக்கு மட்டும் புதிதாக 500 பேருந்து விடப்படுகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இயங்கும் பல பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக புதிய பேருந்துகளை அரசு திட்டமிட்டு அதன்படி படிப்படியாக புதிய பஸ்களை இயக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (3ஆம் தேதி) தமிழகம் முழுவதிலும் இயங்கும் வகையில் 1,000 புதிய பேருந்துகளை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இந்த பேருந்துகளில் சென்னைக்கு மட்டும் 500 புதிய பேருந்துகள் விடப்படுகிறது. இவற்றில் படிக்கட்டு உயரம் குறைவான, பகுதி தாழ்தளமாக 100 பேருந்துகளும், 400 சாதாரண பேருந்துகளும் அடங்கும்.
இதுதவிர 10 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் மீண்டும் குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மொத்தம் 7 `ஏ.சி. அல்ட்ரா-டீலக்ஸ்' பேருந்துகள் உள்பட 50 புதிய அல்ட்ரா-டீலக்ஸ் விரைவு பேருந்துகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதுபோல், தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்துக் கழகங்களுக்கு 450 பேருந்துகள் புதிதாக விடப்படுகின்றன. சுமார் ரூ.200 கோடியில் 1,000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி புதிய பேருந்துகளை துவக்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், நேரு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.