Publish Date: Thu, 20 Dec 2007 (10:25 IST)
Updated Date: Thu, 20 Dec 2007 (10:24 IST)
''தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த செய்திகள் கேட்டு, புதுடெல்லியில் நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். மழை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு, உரிய நிவாரணப் பணிகளையும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அமைச்சர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். நிவாரண நடவடிக்கைகளை உரிய நேரத்தில் விரைந்து செய்து முடிக்கவும் முதலமைச்சர் கருணாநிதி அறிவுரை வழங்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.