Publish Date: Fri, 02 Nov 2007 (13:16 IST)
Updated Date: Fri, 02 Nov 2007 (13:16 IST)
முதலில் 30 நதிகளை இணைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் கூறினார்.
புதுச்சேரியில் தேசிய நீர்வள மேம்பாட்டு முகவாண்மையும், புதுச்சேரி அரசின் பொதுப்பணி துறையும் இணைந்து நடத்தும் 12வது தேசிய நீர்வள 2 நாள் மாநாடு தொடங்கி உள்ளது. இதில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ், முதலமைச்சர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், 2007ஆம் ஆண்டு தண்ணீர் ஆண்டாக கொண்டாடப்படும் தருணத்தில், இந்த மாநாடு புதுச்சேரியில் நடப்பது மிகவும் பொருத்தமானது. அந்த அடிப்படையில் நதிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்து, அதற்கு முதல் கட்டமாக புதுச்சேரியை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது புதுச்சேரி பயனடையும் விதமாக பெண்ணை ஆறு, பாலாறு, காவிரி, கோதாவரி ஆகிய ஆறுகளை இணைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைய மத்திய அரசு உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் பேசுகையில், முதலில் 30 நதிகளை இணைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தென்னிந்தியாவில் 16 நதிகளையும், இமயமலை சாரலில் 14 நதிகளையும் இணைக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.
கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைக்கும் பணியானது மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, ஒரிசா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் தொடர்புடையது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது நல்லமுறையில் நிறைவேறினால் தமிழ்நாட்டின் அருகே உள்ள புதுச்சேரியும் பயனடையும். இது நிறைவேறினால் நாம் உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ முடியும்.
பெண்ணையாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும். அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று அமைச்சர் சைஃபுதீன் சோஸ் உறுதிப்பட கூறினார்.