Publish Date: Fri, 02 Nov 2007 (11:16 IST)
Updated Date: Fri, 02 Nov 2007 (11:16 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பரூக்கி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் 15 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் வழியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேல் கம்பினால் தாக்கப்பட்டு காயம் அடைந்த சம்பவம் குறித்து விரிவான முறையில் விசாரணை செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், வளர்ச்சி ஆணையர், சிறப்பு ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையரான பரூக்கியை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
கிருஷ்ணசாமி கலந்து கொள்ள இருந்த கூட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு இருந்ததா? இந்தக் கூட்டத்துக்கு காவல்துறையின் முன் அனுமதி பெறப்பட்டு இருந்ததா? கிருஷ்ணசாமியின் பயணம், வழித்தடம் குறித்த விவரங்களை காவல்துறையினர் அறிந்திருந்தனரா? அவ்வாறு இல்லை என்றால், அதுபற்றி காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் காவல்துறையினரின் கவனக் குறைவு இருந்ததா? அப்படி இருந்தது என்றால் அதன் விவரங்கள் என்ன? இந்த சம்பவம் குறித்த இதர விவரங்கள் என்ன? என்பதை விரிவான முறையில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அரசுக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி பரூக்கிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.