Publish Date: Mon, 22 Oct 2007 (12:36 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். இதன் தொடக்கமாக வங்க கடலில் நிறைய மழை மேகங்கள் காணப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் காலை, மாலை நேரங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக லேசாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
இது போல் புதுச்சேரி, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் உள் பகுதியிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.