Publish Date: Fri, 12 Oct 2007 (11:29 IST)
Updated Date: Fri, 12 Oct 2007 (11:28 IST)
நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 3 பக்தர்கள் பலியானார்கள்.
புரட்டாசி மாத விழாவை முன்னிட்டு திருப்பதி செல்ல நேற்று தர்மபுரி அடுத்த சோழியநல்லூரை சேர்ந்த 62 பேர் சுற்றுலா பேருந்தில் வந்தனர். இரவு 11 மணிக்கு பேருந்து ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையில் நின்ற லாரி மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தன் (70) என்பவர் பலியானார். பேருந்தில் இருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கி அலறினார்கள். அவர்களின் அலறல் கேட்டு பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்த இடிபாடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. காயம் அடைந்தவர்களை வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 3 ஆம்புலன்ஸ்கள் இருந்தும் ஒரு டிவைர் கூட இல்லை. இதனால் ஆத்திரத்தில் பொதுமக்கள், ஆம்புலன்ஸ்சுகளை அடித்து உடைத்தனர்.
தகவல் அறிந்து ஆம்பூர் காவல் கண்காணிப்பாளர் ஹரி விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். அவர், படுகாயம் அடைந்தவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் (8) சித்ரா (40) ஆகிய இருவரும் இறந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.