Publish Date: Thu, 16 Aug 2007 (16:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:05 IST)
வீடுகளுக்கு கம்பிவலை தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்க அரசு உருவாக்கியுள்ள கேபிள் தொலைக்காட்சி கழகம் அப்படிப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு மைய நிறுவனமாக செயல்படுமே தவிர அது கம்பிவலை தொலைக்காட்சி ஆங்காங்கு வழங்கும் சிறு அமைப்புகளுக்கு போட்டி அல்ல என்று முதலமைச்சர் கருணாநிதி விளக்கியுள்ளார்.
தமிழக அரசு உருவாக்கியுள்ள கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள கம்பிவலை தொலைக்காட்சி இணைப்பு வழங்கல் அனைத்தையும் தன் கையில் எடுத்துக் கொள்ளும் என்று கருதுவது தவறானது என்றும், அது தற்போது கேபிள் மூலம் தொலைக்காட்சி சேவைகளை ஒன்றிணைத்து வழங்கி வரும் எம்.எஸ்.ஓ (Multi Service Opertor) என்று அழைக்கப்படும் பல்வகை தொலைக்காட்சி சேவை அளிக்கும் அமைப்பைப் போன்றதாகும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் விளக்கியுள்ளார்.
அரசு நிறுவனத்தின் வருகையால் தங்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் யாராவது நினைத்தால் அவர்கள் தமிழக அரசு துவங்கும் இந்த புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தங்களது சேவைகளை தொடரலாம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக அரசு உருவாக்கியுள்ள அமைப்பு ஒட்டுமொத்தமாக கம்பி வலைத் தொலைக்காட்சி அனைத்தையுமே கையேற்க உள்ளது என்பது போன்ற சில சுயநல சக்திகள் உருவாக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.