Publish Date: Fri, 03 Aug 2007 (13:48 IST)
Updated Date: Fri, 03 Aug 2007 (13:47 IST)
இந்தாண்டிற்குள் தமிழகத்தில் புதிதாக 50 அமர்வு நீதிமன்றங்கள் உள்பட 72 நீதிமன்றங்கள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாலை நேர நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வலியுறுத்தினார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வாடகை கட்டடங்களில் நீதிமன்றங்கள் இயங்கும் நிலை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழக அரசு நீதித்துறைக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் நடப்பு நிதியாண்டில் நீதிமன்ற கட்டடங்களுக்கும், குடியிருப்புகள் கட்டுவதற்கும் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டிற்குள் புதிதாக 50 அமர்வு நீதிமன்றங்கள் உள்பட 72 நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.