Publish Date: Wed, 01 Aug 2007 (17:39 IST)
Updated Date: Wed, 01 Aug 2007 (17:38 IST)
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 59 பேர் குற்றவாளிகளே என்று கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர். இவ்வழக்கில் 167 பேர் மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. உத்திராபதி, சதித் திட்டம் தீட்டியது, குண்டு வெடிப்பை நடத்துவதற்கு உதவியது ஆகிய, அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ. பாஷா மீதான இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தார்.
அல் உம்மா இயக்கத்தின் பொதுச் செயலர் மொஹம்மது அன்சாரி உள்ளிட்ட மற்ற 58 பேருக்கும் எதிரான, ஒன்று கூடி சதித் திட்டம் தீட்டியது, அதனை நிறைவேற்றியது, சமூக இணக்கத்தை தகர்த்தது, வெடிபொருட்கள் சட்டம் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கே. உத்திராபதி தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் 14வது குற்றவாளியாக குற்றப்பதிவு செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நாசர் மதானிக்கு எதிரான 5 குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி உத்திராபதி தீர்ப்பளித்தார்.
குற்றம் சாற்றப்பட்ட 167 பேரில் 60 பேர் மீது இன்று மதியம் வரை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது இன்று மதியல் தீர்ப்பளிக்கப்படும் என்ற நீதிபதி கூறினார்.
இவ்வழக்கில் சாதாரண குற்றங்கள் சாற்றப்பட்டுள்ள 6 பேர் பிணைய விடுதலை பெறுவதற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மனு செய்யலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.