Publish Date: Wed, 01 Aug 2007 (10:05 IST)
Updated Date: Wed, 01 Aug 2007 (10:04 IST)
தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அரசு உயர்த்தி, புதிய வழிகாட்டி மதிப்பை இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறது.
புதிதாக ஒரு இடமோ அல்லது வீடோ வாங்கும் போது அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது 8 சதவீதம் முத்திரை கட்டணமும், ஒரு சதவீதம் பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் அரசு தனியாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்துள்ளது.
இவைதவிர, சந்தைவிலை என்று தனி மதிப்பு ஒன்று இருக்கும். பெரும்பாலான இடங்களில் அரசு வழிகாட்டி மதிப்பை விட சந்தைவிலை பல மடங்கு அதிகமாக இருக்கும். அதிக முத்திரை கட்டணம், பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தை சந்தைவிலைக்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கினாலும் அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்வது வழக்கமாகும்.
முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் ஒரு இடத்தின் வளர்ச்சி வீதத்திற்கு ஏற்ப ஆண்டு தோறும் உயர்த்தப்படும். இந்த உயர்வு 20 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை இருக்கும். கடந்த 2003 ஆம் ஆண்டு 13 சதவீதமாக இருந்த முத்திரைத்தாள் கட்டணம் 8 சதவீதமாக குறைக்கபபட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக கட்டணம் குறைக்கப்படவில்லை.
தற்போது, ஒவ்வொரு பகுதியிலும் தெருக்கள் வாரியாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படும். வணிகப்பகுதி, குடியிருப்புப் பகுதி, விவசாயப்பகுதி, மிகவும் பின்தங்கியப்பகுதி என 4 வகைகளாகப் பிரிந்து உள்ளனர். புதிய வழிகாட்டி மதிப்பு சந்தைவிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. சென்னையில் வழிகாட்டி மதிப்பு பலமடங்கு உயர்த்தப்படும் என சார் பதிவாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதிவுத் துறை மூலம் அரசுக்கு ஆண்டுற்கு ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. புதிய வழிகாட்டி மதிப்பு மூலம் 4 மடங்கு வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலாகிறது.