Publish Date: Thu, 14 Jun 2007 (17:45 IST)
Updated Date: Thu, 14 Jun 2007 (17:44 IST)
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டுமெனில் தமிழ் ஈழம் தான்அதற்கு ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்!
திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழர்களின் சுய ஆட்சியே இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாகும் என்று கூறினார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனைக்கு எவ்வாறு இரு இனத்தவரும் ஒருவொருக்கொருவர் அங்கீகரித்துக் கொள்வதன் மூலம் தீர்வு சாத்தியம் என்று சர்வதேச சமூகம் கருகிறதோ, அதே தீர்வுதான் இலங்கைக்கும் பொருந்தும் என்றும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அவர்கள் வாழ வேண்டும் என்றும், அதேபோல சிங்களவர்களின் பகுதிகளில் அவர்கள் தனியே வாழ வேண்டும் என்றும், இதன்மூலம் இரு சமூகங்களும் தனித்தனியே அமைதியுடன் வாழ முடியும் என்று ராமதாஸ் கூறினார்.
தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் மனித உரிமை மீறல்களையும், வன்முறையையும், மிரட்டல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கண்டித்திருப்பதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புச் செயலரும், அதிபர் ராஜபக்சேயின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேயின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
கொழும்புவில் இருந்து தமிழர்களை அந்நாட்டு காவல்துறை வெளியேற்றியதன் மூலம் அங்கு இரண்டு தேசங்கள் உள்ளதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், இலங்கைத் தீவில் தமிழ் தேசம் என்றும், சிங்கள தேசம் என்றும் தனித்தனியாக உள்ளது என்பதே யதார்த்தம் என்றும், எனவே தமிழர் பகுதிகளில் இருந்து சிறிலங்க ராணுவம் வெளியேறுவதே இனச் சிக்கலிற்குத் தீர்வாகும் என்று கூறினார்.
இந்த யதார்த்தச் சூழலை மேற்கத்திய நாடுகள் உணர்ந்துள்ளன என்றும், இந்திய அரசும் அந்த உண்மையை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
"இந்திய அரசின் அணுகுமுறை மாறவேண்டும். இலங்கைத் தமிழர்கள் அரசியல் மனித உரிமைகளை பெறவேண்டும் என்று இந்தியா விரும்பினால் அதற்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் தான். தனி ஈழம் உருவாக அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார். (யு.என்.ஐ.)