Publish Date: Sat, 25 Aug 2007 (11:58 IST)
Updated Date: Sat, 25 Aug 2007 (11:58 IST)
இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஜாக் காலீஸ் இடம்பெறாதது குறித்து கருத்து கூறியது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கெளரவத்தை குலைப்பதாய் உள்ளது என்று விக்கெட் கீப்பர் மார்க் பௌச்சரை குற்றம்சாட்டியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவருடைய ஊதியத்திலிருந்து 60 விழுக்காடு அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் இருபது- 20 துவக்க உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஜாக் காலீஸ் இடம்பெறவில்லை. இது குறித்து விக்கெட் கீப்பர் மார்க் பௌச்சர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு கொள்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தார்.
பௌச்சரின் விமர்சனம் தென் ஆபிரிக்க கிரிக்கெட்டிற்கு களங்கம் விளைவிப்பதாயுள்ளது என்று அவர் மீது விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் தான் கூறிய கருத்திலிருந்து பின் வாங்காத பவுச்சர் மன்னிப்பு கோரவும் மறுத்து விட்டார். இதனால் விசாரணைக் குழு இருபது- 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலிருந்து பவுச்சரை முற்றிலும் ஒதுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கழகம் எச்சரிக்கை செய்து விட்டுவிடலாம் என்று கேட்டுக் கொண்டது. இதனால் அபராதம் மட்டும் விதிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இருபது- 20 உலகக் கோப்பை ஆட்டத் தொகையிலிருந்து மார்க் பௌச்சர் 60 சதவீதத் தொகையை அபராதமாக செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.