ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை - ராகுல் காந்தி எதிர்ப்பு
Publish Date: Wed, 19 Feb 2014 (20:01 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (19:59 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வதாக அறிவித்துள்ளதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்த்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.இது குறித்து அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “நான் மரண தண்டனைக்கு எதிரானவன். மரண தண்டனை விதிப்பதால், என் தந்தையும் திரும்ப வரப்போவது இல்லை. ஆனால், ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விட்டால் பின்னர் சாதாரண மக்கள் அரசிடம் இருந்து நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?ராஜீவ் காந்தி என் தந்தை என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. நாட்டின் நலனுக்காக மட்டுமே சொல்கிறேன். ஏனெனில், சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இதை நான் உங்கள் முடிவிற்கே விடுகிறேன்” என்றார்.