அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கோத்ரா சம்பவத்திற்கு பின் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, முதல்வர் நரேந்திர மோடிக்கு வந்த, அவர் பிறருக்குப் பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரிடம (எஸ்.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜன் சங்கர்ஷ் மன்ச் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், இந்த தொலைபேசி அழைப்புகளை ஒப்படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடிக்கு, முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி. தலைவர் டாக்டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாக பேசியுள்ளதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்களில் மாயா பென் கோத்னானி மற்றும் ஜெய்தீப் படேல் இருவரும் நரோடி படியா மற்றும் நரோடா கிராமத்தில் நடந்த ஒட்டுமொத்த படுகொலைகளைத் தூண்டி விட்டதாகவும், நேரில் சென்று கலவரக்காரர்களை ஊக்கப்படுத்தியதாகவும் குற்றசாற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
பெண் அமைச்சரான மாயா பென் கோத்னானி, இந்த வழக்கில் ஜாமீனில் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை பதவிநீக்கம் செய்ய மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் டிஸ்மிஸ் செய்யவில்லை.
பின்னர் மாயாவே தனது பதவியை ராஜினாமா செய்து சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாயா பென், ஜெய்தீப் படேல் ஆகிய இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.