Publish Date: Wed, 15 Apr 2009 (20:03 IST)
Updated Date: Wed, 15 Apr 2009 (20:03 IST)
இந்தியாவிற்கு எதிராக தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு தனது மண்ணை அனுமதிக்கும் பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையையும் இந்தியா நடத்தாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லியி்ல ஊடக ஆசிரியர்கள் அமைப்புக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மும்பைத் தாக்குதலிற்குக் காரணமாக பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று கூறினார்.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்ட ஆதரங்கள் போதுமானவையல்ல என்று அந்நாட்டின் குற்றச்சாற்றையும் பிரதமர் மறுத்தார்.
“தனது மண்ணை இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கும் வரை பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சும் நடத்த மாட்டோம். அந்நாட்டுடன் ஒத்துழைக்கத் தயார், ஆனால் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் அது நேர்மையைக் காட்ட வேண்டும்” என்று மன்மோகன் சிங் கூறினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ள ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் கொள்கையில் இந்தியாவும் இணைய வேண்டும் என்று அமெரிக்க விடுத்துள்ள கோரிக்கை குறித்து பேசிய பிரதமர், “ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாத சக்திகள் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.