'ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
`ஸ்பெக்ட்ரம்' அலைவரிசையில் ஏல ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டு முறைகேடுகள் இருப்பதாக `வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில்' சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சக உதவி ஆலோசகர் ராவ் இந்த வழக்கிற்கு பதில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'ஸ்பெக்ட்ரம்' என்பது இயற்கை வளமாகும். அது மக்களுக்கு தடையின்றி கிடைக்கவே அதை முறைப்படுத்த மத்திய அரசு முயல்கிறது. ஆனால், சட்டத்திற்கும், உண்மைக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களை மனுதாரர் கூறியுள்ளார். 2004-ம் ஆண்டே மத்திய அரசு `பிராட் பேண்டு' பாலிசியை கொண்டு வந்தது. எவ்வாறு அலைவரிசைகளை ஏலமிட்டு ஒதுக்குவது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் மாதம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது.
ஒதுக்கீடு சம்பந்தமான எல்லா முடிவுகளும் வழிகாட்டு முறையில்தான் செய்யப்படுகிறது. இதில் மாறுபாடு கிடையாது. `இன்டர்நெட்' சேவையை `3ஜி' சேவையுடன் சேர்த்து ஏலம் விடுவதால் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மத்திய அரசின் வருவாய் பெருகும். இந்த வருவாயை கொண்டு அதிக நலதிட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த ஒதுக்கீடு காரணமாக இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணம் அதிகரிக்கும் என்பது தவறான கருத்தாகும். குறைந்தது 4 பேருக்காவது நாங்கள் அலைவரிசையை ஒதுக்கீடு செய்கிறோம். அதன்மூலம் போட்டி பெருகும்.
செல்போன் பயன்பாடு அதிகரித்து, அதன் கட்டணங்கள் குறைந்ததுபோல, இன்டர்நெட் கட்டணமும் குறையும். வழிகாட்டு முறைப்படி தான் தகுந்த முன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. `ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்குவதால் இன்டர்நெட் சேவைக்கான தனியாரின் உரிமை பாதிக்காது. கம்பியில்லா தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கிராமப்புறங்களுக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை வணிகமாக மத்திய அரசு கருதவில்லை.
தன்னிடம் உள்ள இயற்கை வளத்தை முறைப்படுத்தி, அதன்மூலம் வரும் வருமானத்தை நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தவே மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இது மத்திய அரசின் பொருளாதார கொள்கையாகும். இதில் சிறிய குறைபாடுகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட, அதன் முடிவு ரத்து செய்ய முடியாது. கொள்கை அளவிலும், பொருளாதார கொள்கையிலும் மத்திய அரசு எடுத்த முடிவில் தலையிட கோர்ட்டுக்கு அதிகார வரம்பில்லை. ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.