Publish Date: Sat, 07 Feb 2009 (09:24 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (09:18 IST)
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க, இந்தியா உடனடியாக தலையிட வேண்டியது அவசியம் என்றும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், ''இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டையில், அப்பாவி மக்கள் படும் துயரம் பரிதாபமாக இருக்கிறது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க, இந்தியா உடனடியாக தலையிட வேண்டியது அவசியம். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை பிரச்சனைக்கு ராணுவ பலத்தால் தீர்வு காண முடியாது என்று பா.ஜ.க. கருதுகிறது. 1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தி, இப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டை, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படும். விடுதலைப்புலிகளின் 95 சதவீத பலம் போய் விட்டதாக ராணுவம் கூறுகிறது. விடுதலைப்புலிகளின் பலம் முற்றிலுமாக முடிவுக்கு வரும்போது, ஆயுத போராட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சூழ்நிலையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும். 30 ஆண்டுகால இனப்பிரச்சனையை தீர்க்க ஒரு புதிய தீர்வை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும்.
முதலில், விடுதலைப்புலிகளையும், அப்பாவி தமிழர்களையும் இலங்கை அரசு வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பையும், சுயமரியாதையையும் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
Webdunia
Publish Date: Sat, 07 Feb 2009 (09:24 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (09:18 IST)