Publish Date: Tue, 27 Jan 2009 (14:22 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (14:19 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவின் மீதான வெளிப்படையான போர் என்பதால், அதே முறையில் நாம் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், "கடந்த நவம்பர் 26இல் மும்பையில் நடந்துள்ளது ஒன்றும் இன்னொரு பயங்கரவாதச் சம்பவம் அல்ல. அது இந்தியா மீதான வெளிப்படையான போர் என்பதால், இதற்கு அதே முறையில் உடனடியாக நாம் பதிலடி தர வேண்டும்"என்றார்.
"மும்பைத் தாக்குதல்களில் பாகிஸ்தானிற்குத் தொடர்புள்ளது என்பதற்குத் தேவையான, மறுக்க முடியாத ஆதாரங்கள் என்றபோதிலும், கடந்த இரண்டு மாதங்களாக உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக மக்களைக் குழப்பும் முரண்பட்ட அறிக்கைகளைத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு தலைவர்களும் அமைச்சர்களும் வெளியிட்டு வந்தனர் என்பதை நாம் கண்டுள்ளோம்.
வார்த்தைப் போருக்கான நேரம் முடிந்துவிட்டது. இது நடவடிக்கைக்கான நேரம் ஆகும்" என்றார் ராஜ்நாத் சிங்.