Publish Date: Sat, 24 Jan 2009 (14:30 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (14:30 IST)
பிரதமர் மன்மோகன் சிங் இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்துவரும் பதவிக்கு வேறு ஒருவர் அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு எந்த அவசியமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மின்னனு ஆளுமை தொடர்பான நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்ட அதன் தலைவர் வீரப்ப மொய்லியிடன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.
பிரதமர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் பொறுப்புகளைக் கவனிக்க பிரணாப் முகர்ஜி செயல் பிரதமராக நியமிக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரண்டு பிரதமர்கள் இருக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று பதிலளித்த வீரப்ப மொய்லி, பிரதமர் நாட்டில் இல்லாதபோது அவருடைய பொறுப்புகளை மூத்த அமைச்சர் கவனிப்பதுதான் மரபாக உள்ளது என்று கூறினார்.
பிரதமர் முழு உடல் நலம் பெற்று இரண்டு வாரத்தில் பணிக்குத் திரும்புவார் என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.