Publish Date: Thu, 22 Jan 2009 (15:35 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (15:35 IST)
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி 4 மாநிலங்களில் நக்சலைட் அமைப்புகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பீகாரில் 11 சிமெண்ட் லாரிகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
விலைவாசி உயர்வு, காவல்துறை அடக்குமுறை ஆகியவற்றைக் கண்டித்து நக்சலைட்டுகள் இன்று பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிசா ஆகிய 4 மாநிலங்களில் 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பீகாரில் ரோக்தால் மாவட்டம் கல்பான்பூரில் உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த 11 லாரிகளை ரஞ்ஜீத் கஞ்ச் என்ற இடத்தில் வழிமறித்த நக்சலைட்டுகள், ஓட்டுநர், கிளீனர்களை இறக்கி விட்டு 11 லாரிகளுக்கும் தீ வைத்தனர்.
இதில் எல்லா லாரிகளும் சிமெண்ட்டோடு எரிந்து நாசமாயின. தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் நக்சலைட்டுகள் தப்பிவிட்டனர்.