Publish Date: Thu, 22 Jan 2009 (13:56 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (13:55 IST)
தங்களுக்குள் விரிவான பொருளாதார கூட்டு உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பான இருதரப்பு பேச்சுக்களை துவக்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
கனடா நாட்டு அமைச்சர் ஸ்டாக்வெல் டேயை அண்மையில் புது டெல்லியில் சந்தித்துப் பேசிய மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் கமல்நாத் இதை அறிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார கூட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருதரப்பும் உறுதியுடன் இருப்பதாகவும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இரு நாடுகளிலும் உள்ள தொழில் துறையினருக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்றும் கமல்நாத் கூறினார்.
இக்கூட்டத்தில் பேசிய கனடா நாட்டு அமைச்சர் ஸ்டாக்வெல் டே, விரிவான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களை அதிகாரிகள் மட்டத்தில் துவக்குவதற்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அதிக அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை, குறிப்பாக உள்கட்டமைப்பு, வேளாண்மை தொடர்பான துறைகளில், இருநாடுகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர்.