அமெரிக்காவில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த முத்யாலா புருஷோத்தமன் என்ற 27 வயதான தகவல் தொழில் நுட்ப மென்பொருள் ஊழியர் இண்டியானாபோலீஸில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த மாதத்தில் இது இரண்டாவது மர்மச் சாவாகும்.
செவ்வாய்க் கிழமை இரவு புருஷோத்தமன் அவரது வீட்டு குளியலறையில் இறந்து கிடந்ததாக ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் வசிக்கும் இவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ட்ரைடன் இன்ஃபோ டெக் என்ற நிறுவனத்திற்கு பணியாற்றி வந்த புருஷோத்தமன் 25 வயது பிரவீணா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
புருஷோத்தம்-பிரவீணா தம்பதியினரின் குடும்பங்கள் இந்த மர்ம மரணம் குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் கூறவில்லை என்ற போதிலும் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
அதாவது அவரது இல்லத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்று அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை கண்டெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிகாவில் புருஷோத்தமனுடன் வாழ்ந்து வந்த மனைவி பிரவீணாவும் ஒரு மென்பொருள் ஊழியர். செவ்வாயன்று அவர் தன் கணவருக்கு தொலை பேசி அழைப்புகள் செய்துள்ளார். ஆனால் தொலைபேசிக்கு பதில் இல்லாததையடுத்து வீடு திரும்பிய இவர், கதவுகள் உள் பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டதையறிந்து பல முறை அழைப்பு மணியை அழித்தியும் கதவு திறக்கவில்லை என்பதால் காவல்துறை உதவியை நாடினார். கதவு திறந்தவுடன் புருஷோத்தம் உடலைப் பார்த்து அதிர்ந்தார் பிரவீணா.
ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவில் பணி புரிந்த சத்யம் நிறுவன ஊழியர் அக்ஷய் விஷால் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது புருஷோத்தமன் மரணமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.