Publish Date: Mon, 19 Jan 2009 (18:29 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (18:09 IST)
ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக பிப்ரவரி 3 ஆம் தேதி, தேர்தலில் பங்கேற்கத் தகுதியுள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள், 40 மாநிலக் கட்சிகள் ஆகியவற்றுடன் ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு அடுத்த நாள், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. ஒரு நாள் முழுவதும் நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பிரச்சனைகள், வாக்காளர் பட்டியல் விவகாரங்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் விவாதிக்கப்படுகின்றன.
பிப்ரவரி 5, 6 தேதிகளில், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள் ஆகியோருடன் பல்வேறு கட்டங்களாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.