Publish Date: Thu, 15 Jan 2009 (16:46 IST)
Updated Date: Thu, 15 Jan 2009 (16:46 IST)
இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செல்லும் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள்.
தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். ஆனால், அவருடைய இலங்கை பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் இன்றிரவு கொழும்பு செல்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்றிரவு இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் சிவசங்க மேன்ன, அதிபர் ராஜபக்ச, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களுடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் தீவிர சண்டை நடத்தி வருகிறது. கடைசி கட்டமாக முல்லைத்தீவை மீட்க ராணுவம் போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அயலுறவுத்துறை செயலரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Webdunia
Publish Date: Thu, 15 Jan 2009 (16:46 IST)
Updated Date: Thu, 15 Jan 2009 (16:46 IST)