Publish Date: Sat, 10 Jan 2009 (16:28 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:38 IST)
உலகளாவிய பொருளாதார பின்னடைவு நமது நாட்டை நெருக்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், இந்திய செய்தி ஊடக உலகில் வீசிய ஒரு புத்துணர்வுக் காற்று அனைவரையும் உலுக்கியுள்ளது.
மத்திய, வட இந்தியாவில் பெரும் வாசகர்களைப் பெற்ற நைதுனியா இந்தி நாளிதழ் மற்றும் எமது நிறுவனமான வெப்துனியா.காம் இந்தியாவின் தலைமை செயல் அலுவலராகிய வினய் சஜ்லானியும், பிசினஸ் வேர்ல்ட் இந்தியாவின் முன்னாள் ஆசிரியருமான ஜெஹாங்கீர் போச்சாவும் இணைந்து துவக்கியுள்ள இண்டி மீடியா நிறுவனம், ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ஐஎன்எக்ஸ் நியூஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது என்பதே அந்தப் புத்துணர்வுக் காற்றாகும்.
பொருளாதார சரிவின் காரணமாக ஊடகங்கள் ஆட்டம் கண்டுவரும் நிலையில், இந்திரானி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்திவந்த ஐஎன்எக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளையும் இண்டி மீடியா வாங்கியுள்ளது வரவேற்பிற்குரிய ஒரு மாற்றமாகும்.
ஆங்கில தொலைக்காட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்தச் சூழலில், தனது நம்பகத்தன்மையை அதிகரித்து, தொழில் ரீதியான செரிவூட்டலுடன் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி தனியிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மக்களிடையே பெரும் நம்பிக்கையும் மதிப்பும் பெற்ற ஒரு நிறுவனத்தின் கைகளுக்கு சென்றுள்ள நியூஸ் எக்ஸ், மேலும் பரவலாக மக்களிடையே செல்லும் என்றும், இந்த மாற்றம் அதனை வணிக ரீதியாக மேலும் பலப்படுத்தும் என்றும் பீட்டர் முகர்ஜி கூறியுள்ளார்.