சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.7,800 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவை சிபி- சிஐடி காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக நாளை மாலை 4 மணிக்குள் தனது முன்பு ஆஜராக வேண்டும் என்று ராமலிங்க ராஜூவிற்கு பங்கு வர்த்தக கண்காணிப்பு அமைப்பு (செபி) தாக்கீது அனுப்பியுள்ளது.
சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் வங்கிகளிலோ அல்லது ரொக்கமாகவோ இல்லாமல் ரூ.5,040 கோடி இருப்பில் இருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, செபியின் வடக்கு மண்டலப் பொது மேலாளர் ஏ. சுனில் குமார் தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், நிதி மோசடியை ஒப்புக்கொண்டுள்ளதன் அடிப்படையில் ராமலிங்க ராஜூ எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமலிங்க ராஜூவின் நிதி மோசடி தொடர்பாக மாநகரக் காவல்துறைக்குப் புகார் எதுவும் வரவில்லை என்றாலும், இந்த வழக்கைத் தன்னிச்சையாக எடுத்து விசாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், கைது நடவடிக்கைக்கான ஆதாரங்களைச் சிபி-சிஐடி காவலர்கள் திரட்டி வருவதாகவும் ஹைதராபாத் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தனது பதவி விலகல் குறித்து ராமலிங்க ராஜு இயக்குநர்களுக்கும், பங்குச் சந்தைகள், பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபிக்கு எழுதிய கடிதத்தில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் செயற்கையாக வருவாய், இலாபத்தை காண்பித்துள்ளதாக கூறியுள்ளதைக் காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.
நாளை செபிமுன்பு ஆஜர்!
முன்னதாக நிதி மோசடி பற்றிய விசாரணைக்காக இன்று மாலை 4.30 மணிக்குத் தனது முன்பு ஆஜாராகுமாறு ராமலிங்க ராஜூவிற்கு செபி தாக்கீது அனுப்பி இருந்தது. ஆனால் இன்று நடந்த விசாரணையில் ராமலிங்க ராஜூவிற்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் பரத் குமார் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு 24 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று செபியிடம் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ராஜூவின் உடல்நிலை சிறிது சரியில்லை என்றும் தெரிவித்தார்.
எனவே ராமலிங்க ராஜூ நாளை மாலை 4 மணிக்கு செபி முன்பு ஆஜராவார் என்று கருதப்படுகிறது. அதற்குள் அவர் கைது செய்யப்பட்டால் அவரது வழக்கறிஞர் ஆஜராவார்.