Publish Date: Thu, 08 Jan 2009 (20:17 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (20:17 IST)
தீவிரவாதமும், பயங்கரவாதமும் நம்மை நிலைகுலையச் செய்ய இயலாது என தொடர்ந்து உறுதியாக நிரூபித்துள்ளோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சென்னையில் இன்று அயல்நாடுவாழ் இந்தியர் மாநாட்டை துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், பாரம்பரியத்துக்கும் விடப்பட்ட சவாலாக சமீபத்தில் நடைபெற்ற மும்பை தாக்குதல்கள் அமைந்தன என்றார்.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய பொருளாதாரத்தில் சரிவு நிலை காணப்பட்ட போதிலும், இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவே இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், நடப்பாண்டில் 7 சதவிகித வளர்ச்சி எட்டப்படும் என்றும், இது உலகிலேயே அதிக வளர்ச்சியாகத் திகழும் என்றும் கூறினார்.
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு கருணாநிதி கோரிக்கை!
விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, நாட்டின் பக்கபலமாக விளங்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலகின் மூலைமுடுக்கெல்லாம் நமது பண்பாடுகளை சுமந்து செல்கிறார்கள் என்றும், அவர்கள் வாழும் சமுதாயத்தில் இந்திய முன்னேற்றத்திற்கு சேவை புரிந்து வருவதாகவும் கூறினார்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நாட்டிற்கு சவாலை ஏற்படுத்தியிருந்தாலும், கூடிய விரைவில் நிலைமை சீராகும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், இந்த வகையில் தமிழ்நாடு தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு முன்னேற்றத்தைத் தூண்டும் முதலீடுகளை வரவேற்க மாநில அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலகப் பொருளாதார அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்த அயல்நாடு வாழ் இந்தியர்கள், இந்தியப் பிரதிநிதிகளாக செயல்படுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவுசார் இணைய கட்டமைப்பை துவக்கிவைத்து விழா மலரை வெளியிட்டார்.
Webdunia
Publish Date: Thu, 08 Jan 2009 (20:17 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (20:17 IST)