Publish Date: Mon, 05 Jan 2009 (17:39 IST)
Updated Date: Mon, 05 Jan 2009 (17:38 IST)
வேலை நிறுத்தம் செய்யும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7ஆம் தேதி முதல் 14 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு உறுதி அளித்தும் அதிகாரிகள் திருப்தியடையவில்லை.
இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்தால் அவர்கள் மீது `எஸ்மா' மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை பாயும் என்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, ஐ.ஓ.சி., பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல்., மற்றும் கெயில் ஆகிய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.