Publish Date: Fri, 02 Jan 2009 (20:19 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (20:19 IST)
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 9 பணிகளுக்கும், பாரதீப் துறைமுகத்தில் நிலக்கரி, இரும்புத்தாது கையாளும் தளங்கள் அமைக்கவும் ரூ.6,672 கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த 9 பணிகளில் காரைக்குடி-அமராவதி-தேவகோட்டை-திருவாடானை-தேவிபட்டினம்-ராமநாதபுரம் வரையுள்ள 80 கி.மீ சாலையை ரூ.530 கோடி செலவில் வடிவமைத்து, உருவாக்கி, நிதி ஒதுக்கி, செயல்படுத்தி, ஒப்படைக்கும் அடிப்படையில் மேம்படுத்தும் பணியும் அடங்கும்.
இந்தச் சாலையை மேம்படுத்துவதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை 210-ல் திருச்சிராப்பள்ளியில் துவங்கி ராமநாதபுரம் (என்.எச்.49) வரையிலான வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகவும் சீராகும். மேலும் புண்ணியத் தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரை செல்லும் போக்குவரத்தும் மிகவும் எளிதாக இருக்கும். இதுதவிர மதுரையிலிருந்து தொண்டியை திருவாடானையில் இணைக்கும் புதிய தேசிய நெடுஞ்சாலை 230-ல் சென்று வரும் வாகனங்களுக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், பாரதீப் துறைமுகத்தில் இரும்புத் தாது, நிலக்கரி தளங்கள் அமைக்க முறையே ரூ.591.35 கோடி, ரூ.479.01 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைமுகப் பகுதியில் நிலக்கரி கையாளும் கப்பல் போக்குவரத்து எளிமையாக இருக்கும்.
கடல்வழி கட்டணம் குறைவதன் மூலம் நிலக்கரி இறக்குமதிக்கும் செலவு குறையும். சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஏற்றுமதி அதிகரிப்பதோடு நாட்டின் தொழில் துறை பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
Webdunia
Publish Date: Fri, 02 Jan 2009 (20:19 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (20:19 IST)