Publish Date: Tue, 30 Dec 2008 (19:15 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (19:15 IST)
மும்பையில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் உத்தரவிட்டுள்ளார்.
நாகாலாந்து முன்னாள் ஆளுநர் ஆர்.டி. பிரதான் தலைமையிலான இந்த உயர் நிலைக்குழு தனது அறிக்கையை அடுத்த 2 மாதத்திற்குள் மாநில அரசிடம் அளிக்கும் என்று அசோக் சவான் கூறியுள்ளார்.
நாக்பூரில் மாநில சட்டசபையில் இதற்கான உத்தரவை முதல்வர் அசோக் சவான் வெளியிட்டார். உயர் நிலைக்குழு மற்றொரு உறுப்பினராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வி. பாலச்சந்திரன் இருப்பார் என்றும் கூறிய சவான், அடுத்த 2 மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு இக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்மூலம் மாநிலத்தில் இணையமைச்சர் அந்தஸ்தை பாலச்சந்திரன் பெறுவார் என்று தெரிகிறது.