Publish Date: Sun, 28 Dec 2008 (13:13 IST)
Updated Date: Sun, 28 Dec 2008 (13:13 IST)
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பை அடுத்த மாதவாக்கில் வெளியிடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி கூறியிருக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மார்ச் மாதத்தில் பள்ளித் தேர்வுகள் நடைபெறவிருப்பதால், மார்ச் மாதத்தில் மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் அடுத்த மாத மத்தியில் கூடி ஆலோசனை நடத்தி தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள். அதன்பிறகு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கோபாலசாமி கூறினார்.
அநேகமாக ஏப்ரல் - மே மாதவாக்கில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என்றாலும், அதுபற்றி இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி மாத மத்தியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று மேலும் அவர் கூறினார்.
காஷ்மீரில் நடந்த 7 கட்ட தேர்தல் திருப்தி அளிப்பதாகவும், கோபால்சாமி கூறினார்.