Publish Date: Wed, 24 Dec 2008 (18:18 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (18:18 IST)
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 ஆளில்லா விண்கலம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டில் நிலவுக்கு ரோபோவை அனுப்பவும், 2013இல் செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளி வீரருடன் விண்கலத்தை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சந்திரயான்-1 ஆளில்லா விண்கலத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அத்திட்டக் குழுவினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற மாதவன் நாயர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து திட்டம் அடுத்த ஆண்டிற்குள் இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும், 2013இல் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் பணிக்கு, தற்போது செயற்கைக்கோள்களை ஏவ உதவும் புவி மைய செயற்கைக் கோள் செலுத்து வாகனம் (ஜி.எஸ்.எல்.வி.) பயன்படுத்தப்படும் என்றும் நாயர் தெரிவித்தார்.
சந்திரயான்-1 வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்தகட்ட திட்டமான நிலவுக்கு ஆய்வு ரோபோவை அனுப்பும் பணி ரஷ்யாவுடன் இணைந்து 2012இல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்திற்கான வடிவமைப்புப் பணிகள் முடிந்து விட்டதாக நாயர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Wed, 24 Dec 2008 (18:18 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (18:18 IST)