Publish Date: Mon, 22 Dec 2008 (20:32 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (20:31 IST)
நாட்டில் உள்ள என்.டி.சி. ஆலைகளை சீரமைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், தொழில் மற்றும் நிதி மறுகட்டுமான வாரியமும், அமைச்சரவைக் குழுவும் அளித்த பரிந்துரையின் பேரில் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்த, அதன் கீழ் செயல்படும் 9 கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நலிந்த நிலையில் இருக்கும், லாபம் அளிக்காத 67 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விருப்ப ஓய்வில் செல்லவிரும்பும், மூடப்பட்ட ஆலைகளின் உபரி பணியாளர்களுக்கு நஷ்டஈடு அளிக்கப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தினால், என்.டி.சி. பணியாளர்களின் எண்ணிக்கை 12,234 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தால் 59,179 ஊழியர்கள் பலனடைந்துள்ளனர்.
22 ஆலைகளை நவீனப்படுத்த என்.டி.சி. திட்டமிட்டுள்ளது. இதில் 15 ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு விட்டன. 16 ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டம் கூட்டு முயற்சி முறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 22 Dec 2008 (20:32 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (20:31 IST)