Publish Date: Mon, 22 Dec 2008 (17:22 IST)
Updated Date: Mon, 22 Dec 2008 (17:21 IST)
பறவைக் காய்ச்சலை ஒழிக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
நாட்டில் பறவைக் காய்ச்சலின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அவர் இது தொடர்பாக பல்வேறு சுகாதார அமைப்புகளின் தயார் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றார்.
மேலும், இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார அமைப்புகளை அதிகபட்ச தயார்நிலையில் வைத்திருக்குமாறு மாநில முதல்வர்களுக்கும், சுகாதார அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட உள்ளது.
இந்த நோயைப் பொறுத்தவரை, அதைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நோய் தொடர்பாக பாதுகாப்பான நடவடிக்கைகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். நோய் தாக்கிய கோழிகளை அழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புமணி கூறினார்.