இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை பிரம்மோஸ் இன்று முதல் முறையாக செங்குத்தாக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிபெற்றதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது என்று பாதுகாப்புத் துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கவல்ல இந்த ஏவுகணை, இந்திய - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவானதாகும்.
இந்த ஏவுகணைச் சோதனையை இந்தியப் பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள் நேரில் பார்வையிட்டனர்.
இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதன் மூலம், கடல் தளத்தில் இருந்து செங்குத்தாகவும், சாய்வாகவும் செல்லும் திறன் கொண்ட உலகின் முதல் அதிவேக ஏவுகணை என்ற பெருமையை பிரம்மோஸ் பெற்றுள்ளது.