Publish Date: Thu, 18 Dec 2008 (21:07 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு புராதன நினைவுச் சின்னங்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை பரிசீலித்து வருகிறது.
17ம் நூற்றாண்டு புராதன நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு தற்போது பாதுகாப்பு அளித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF) உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தாஜ்மகால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட இதர தேவைகள் குறித்து மதிப்பிட சி.ஐ.எஸ்.எப். தரப்பில் புதிதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாஜ் மகால் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடிய ஆபத்து இருந்தால் அதை முறியடிக்கவும் அதற்காக கூடுதலாக தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை பற்றியும் சி.ஐ.எஸ்.எப். மதிப்பிட்டு தெரிவித்தது.
இதையடுத்து அதை பரிசீலிக்க தொல்லியல் ஆய்வுத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 26ஆம் தேதி மும்பையில் புராதன சிறப்பு வாய்ந்த இடங்களாக கருதப்படும் தாஜ்மகால் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் நாட்டில் உள்ள மற்ற புராதன நினைவுச் சின்னங்களுக்கான பாதுகாப்பு மீது அரசுக்கு கவனம் எழுந்துள்ளது.