Publish Date: Mon, 15 Dec 2008 (19:57 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (19:57 IST)
நமது பிரதமரின் நடவடிக்கை காரணமாக, ஈராக்கில் ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட காலணிகள் இந்தியாவின் மீதும் வீசப்பட்டதாகத்தான் கருதப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறியுள்ளார்.
புஷ் மீது காலணிகள் வீசப்பட்ட சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த யச்சூரி, "இந்திய மக்கள் அனைவரும் ஜார்ஜ் புஷ்ஷை விரும்புகிறார்கள் என்று அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். எனவே, இப்போது புஷ் மீது மட்டுமல்ல இந்தியாவின் மீதும் காலணிகள் வீசப்பட்டுள்ளன" என்றார்.
மேலும், ஈராக்கில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பின் அளவையே இந்தச் சம்பவம் காட்டுகிறது என்றார் அவர்.