Publish Date: Fri, 12 Dec 2008 (22:44 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (22:43 IST)
டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தை நாளை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஜெய்ஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள டிஸ் ஹஜாரி நீதிமன்றத்துக்கு ஒரு மூடிய உறையில் வைத்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் வந்துள்ளது. அதில் நீதிமன்ற வளாகத்தை நாளை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் உங்களுடைய அனைத்து நீதிமன்ற வளாகத்தையும் டிசம்பர் 13ஆம் தேதி, எங்களது தற்கொலைப் படை உதவியுடனோ அல்லது வேறு எதேனும் வகையிலோ தகர்ப்போம்" என்று ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கையெழுத்திட்டு அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நீதிமன்றத்துக்கு இதுபோன்று இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.