பிரதமரை சந்தித்தார் காண்டலீசா ரைஸ்
Publish Date: Thu, 04 Dec 2008 (11:01 IST)
Updated Date: Thu, 04 Dec 2008 (10:58 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு நேரடியான, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த இருப்பதாக பிரதமரிடம் ரைஸ் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.மேலும், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை கண்டறியும் விசாரணையில் உடனடியாகவும், ஒளிவு-மறைவு இன்றியும் இந்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என தாம் பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்த உள்ளதாக ரைஸ் கூறியுள்ளார்.இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த காண்டலீசா ரைஸ், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரை சந்தித்தார். இந்திய பயணத்தை இன்று நிறைவு செய்யும் அவர், புதுடெல்லியில் இருந்து இஸ்லாமாபாத் செல்கிறார்.