மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவன் என்று சந்தேகிக்கப்படும் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தின் முனிசிபல் அலுவலக இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் செளகத் என்பவனை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒருவனின் தொலைபேசி அழைப்புக்கு செளகத் பதிலளித்துள்ளான். இதனை பாதுகாப்புத் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
அந்த தொலைபேசி அழைப்பில், தொடர்பு கொண்ட பயங்கரவாதி, செளகத்தை "தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்து, மும்பையில் தற்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்" என்று கூறியுள்ளான்.
செளகத்துக்கு வந்த மற்றொரு தொலைபேசி அழைப்பில், மும்பையில் உள்ள ஒரு உறவினரின் நலம் பற்றி விசாரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செளகத்திடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.