மும்பையில் இரண்டு நட்சத்திர விடுதிகள், நாரிமேன் குடியிருப்பு ஆகியவற்றில் நுழைந்துள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை முடிவடையும் என்று மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நாரிமேன் குடியிருப்பு, டிரைடண்ட் நட்சத்திர விடுதி, நூற்றாண்டு பழமை வாய்ந்த தாஜ் மஹால் பேலஸ் ஆகியவற்றில் நுழைந்துள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக, அவர்கள் பிடித்து வைத்துள்ள பிணையக் கைதிகளை ஆபத்தில்லாமல் பத்திரமாக மீட்கும் வகையில், தேசியப் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோர் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றார்.
நட்சத்திர விடுதிகளில் நுழைந்துள்ள பயங்கரவாதிகளிடமிருந்து பெரும்பாலான பிணையக் கைதிகள் மீட்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த அவர், நேற்றிரவு 10 மணி முதல் நடந்து வரும் தாக்குதல்களில் 101 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 288 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் உயர் அதிகாரிகள் உட்பட 14 காவலர்களும், 8 தீவிரவாதிகளும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.
மும்பையில் நேற்று இரவு முதல் நடந்துள்ள 13 தாக்குதல்கள், குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்த சரியான விவரம் தெரியவரவில்லை என்ற முதல்வர், பயங்கரவாதிகளில் 20 முதல் 25 பேர் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று கூறினார். இதில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஆறு படைப் பிரிவு ராணுவத்தினர், பெருமளவு கடற்படையினர், 200 தேசியப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்றும், இன்னும் கூடுதல் தேசியப் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுடன் இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை என்றும், அவர்கள் இதுவரை பிணையத் தொகை எதுவும் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தளம் தளமாக திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், தாக்குதல் நடவடிக்கைகள் இன்று நள்ளிரவிலோ அல்லது நாளை அதிகாலையிலோ முடிவடையும் என்ற முதல்வர், தாக்குதல் நடவடிக்கைகள் முடிந்த பின்புதான் இழப்புக்கள் குறித்துத் தெரிவிக்க முடியும் என்றார்.