தெற்கு மும்பையில் புதன்கிழமை இரவு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) தலைவர் ஹேமந்த் கர்கரே, 2 உயர் காவல்துறை அதிகாரிகள் உள்பட 80 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மும்பை நகரின் முக்கிய ரயில் நிலையமான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு 10.33 மணிக்கு முன்பதிவு பகுதி வழியாக ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் சில பயங்கரவாதிகள் வந்தனர்.
பின்னர், பயணிகள் ஓய்வறைக்குள் நுழைந்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டதோடு கையெறி குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் இங்கு மட்டும் 10 பேர் பலியானார்கள்.
இதேபோல், மாசேகான் என்ற இடத்தில் டாக்சியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியானார்கள். தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு வேலை பார்த்து வந்த 3 தொழிலார்கள் பலியானார்கள்.
ஓபராய் ஓட்டலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அந்த ஓட்டல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
தாஜ் ஓட்டலில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 7 அயல்நாட்டினவர் உள்பட 15 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
டிரிடண்ட் ஓட்டலில் இருந்த தப்பித்து ஓட முயன்ற 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை காவல்துறையினருக்கு உதவியாக மத்திய அரசு ராணுவம், கடற்படை, தேசிய பாதுகாப்பு படையை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை விரைந்துள்ளனர். ராணுவம், விரைவு அதிரடிப்படையினரும் மும்பையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மஹாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பாட்டீல் விரைவில் மும்பை வர உள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அத்வானி உள்பட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
கேரளா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ் முக் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்.
இதற்கிடையே, தெற்கு மும்பையில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'டெக்கான் முஜாஹிதின்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி, குஜராத், மேற்கு வங்கம்,சென்னை, பெங்களூரு உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.