அந்தமான்- நிகோபார் சிறைகளில் உள்ள 321 மியான்மர் மீனவர்களின் தண்டனைக் காலம் முடிவதை அடுத்து, அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மீனவர்கள் அனைவரும் பல்வேறு காலங்களில் இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று அந்தமான்- நிகோபார் கடலோரக் காவல்படை கமாண்டர் தலைமை ஆய்வாளர் எஸ்.பி. சர்மா தெரிவித்ததாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
"விடுதலை செய்யப்படும் மீனவர்கள் ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா, ஐ.சி.ஜி.எஸ். அக்கா தேவி, ஐ.சி.ஜி.எஸ். கங்கா தேவி ஆகிய 3 கடலோரக் காவல்படைக் கப்பல்களில் இரண்டு குழுக்களாக யாங்கூனிற்கு அனுப்பப்படுவர்" என்று சர்மா தெரிவித்தார்.
இந்திய அரசிற்கும் மியான்மர் ஒன்றியத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது மூன்றாவது முறையாகும்.