கிருஷ்ணா- கோதாவரிப் படுகையில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் (கச்சா எண்ணெய்) சேமிப்பைக் கண்டுபிடித்து உள்ளதாக மத்திய அரசு சார் நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) தெரிவித்துள்ளது.
நிலத்திற்கு அடியில் 3,757 மீட்டர் முதல் 4,185 மீட்டர் ஆழம் வரையில் மூன்று ஹைட்ரோ கார்பன் படிவுகள் உள்ளன. இதில் 4,108 முதல் 4185 வரை 55 மீட்டர் அளவிற்கு அடர்த்தியான ஹைட்ரோ கார்பன் படிவு உள்ளது என்று ஓ.என்.ஜி.சி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு எண்ணெய் உற்பத்தியைத் துவங்குவதற்கான திட்டப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. 2012- 13 ஆம் ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 20,000 பேரல்களும், அதிகபட்சமாக 2016- 17 ஆம் ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 1,50,000 பேரல்களும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.